ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்திக், ரேவதி சர்மா, புகழ் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஆகஸ்ட் 16, 1947. இதுவரை பல்வேறு சுதந்திரப் போராட்ட கால படங்கள் வெளியாகி இருந்தாலும் இப்படம் அவற்றிலிருந்து சற்றே மாறுபட்ட்து என்று சொல்ல்லாம்
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15 1947க்கு ஒரு நாள் முன்பும் ஒரு நாள் பின்பும் நடக்கும் நிகழ்வுகளே ஆகஸ்ட் 16, 1947 படத்தின் கதை. பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் பிரெசிடென்சி பகுதியில் இருக்கும் செங்காடு என்ற ஊரை ஆட்சி செய்யும் ஆங்கிலேய அதிகாரியும் அவர் மகனும் செய்யும் கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார் அவ்வூரைச் சேர்ந்த கௌதம் கார்திக். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளையும் சேர்த்து சற்றே கதைகான புனைவையும் சேர்த்து மிகச்சிறப்பான கதைக்களத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்குமார். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் அடிப்படை வசதிகள் சென்று சேராத கிராமங்கள் இருக்கும் நிலையில் 1947ம் ஆண்டு வாக்கில் கிராமங்கள் எப்படி இருந்திருக்கும் என கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக காந்தி குறித்து கிராம மக்கள் பேசும் வசனம் மிகச்சிறந்த உதாரணம்
ஆங்கில அதிகாரியின் அடக்குமுறைகளை கண்டு பொங்கும் இளைஞனாக கௌதம் கார்திக் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். தன் தந்தையை போலவே நக்கலான நடிப்பில் கலக்கி இருக்கிறார் கௌதம். நாயகி ரேவதி ஷர்மா அழகாக இருக்கிறார் நன்றாகவும் நடிக்கிறார். புகழின் காமெடி நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. ஆங்கிலேய அதிகாரியாக நடித்திருக்கும் ரிச்சர்ட், கொடூரத்தை தன் நடிப்பில் மூலம் வெளிப்படித்தியுள்ளார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் மனதில் படியும்படியாக கதாபாத்திர அமைப்பும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் இரண்டு பாடல்களும் சிறப்பாக இருக்கிறது. வரலாற்று படத்தின் தன்மையை உணர்ந்து பின்னனி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். படத்தின் ஆகச்சிறந்த பலம் என்று செல்வக்குமார் அவர்களின் ஒளிப்பதிவையும், சுதர்சன் அவர்களின் படத்தொகுப்பையும் சொல்லலாம். கலை இயக்கம் குறிப்பிட்டு பாராட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
ஆகஸ்ட் 16, 1947 – புதிய விடியல்