ஊரில்
நாடார் கடை
செட்டியார் மில்
ஐயர் ஹோட்டல்
என்று நாம் அழைத்தபோது
எந்த பிரச்சனையும் இல்லை!

வ.உ.சிதம்பரம்பிள்ளை
முத்துராமலிங்கத் தேவர்
உ.வே.சுவாமிநாத அய்யர்
ராமசாமி படையாச்சி
சரோஜினி நாயுடு
இப்படி வரலாறு படிக்கும்போது
நாட்டில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்பதைக்கூட
கோனார் தமிழ் உரையில்தானே
படித்தோம்
அப்பொழுது நமக்குள்
பேதங்கள் தோன்றவில்லை!

ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார்
வாகினி நாகிரெட்டி
தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவர்
சிவஶ்ரீ பிக்சர்ஸ் மணி அய்யர்
இப்படி தயாரிப்பாளர்களை
ஜாதியைச் சொல்லி அழைத்தபோது
திரைத்துறையில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

குறத்தி மகன்
தேவர் மகன்
சின்னக் கவுண்டர்
அய்யர் தி கிரேட்
இப்படி ஜாதிப் பெயரில்
படங்கள் வந்தபோதும்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

இன்று
தொட்டதெற்கெல்லாம்
ஜாதிப் பிரச்சனை!
யார் காரணம்?

ஜாதி, மதம் மறந்து
கலைஞனாக மட்டுமே
தன்னை அர்ப்பணித்தவர்களுக்குள்
ஜாதி வெறியை வித்திட்டவர்கள்
யார்?

இன்று
உடன் பணிபுரிபவரின்
ஜாதியை எவனும்
ஆராய்வதில்லை!
மீண்டும் அந்த
ஆராய்ச்சியை
ஆரம்பித்து வைத்துவிடாதீர்கள்!

வாய்ப்பு கேட்பவனிடம்
எவன் ஜாதியை கேட்கிறானோ
அவனே மனிதப்பிழை!

பெரும்பாலும்
சமநிலை அமைந்துவிட்ட நிலையில்
மீண்டும் ஒற்றுமைக்கு
சமாதி கட்டிவிடாதீர்கள்!
தெளிந்த குளத்திற்குள்
பாறாங்கல்லை எறியாதீர்கள்
ஜாதிப்பற்று மனித இயல்பு
ஜாதி வெறி மனிதத்தின் அழிவு!
பேரரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here