ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘பன் பட்டர் ஜாம்’ படம் வெளியான நாளில் இருந்தே பாசிடிவான விமர்சனங்களையும் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பையும் பெற்று வருகிறது. இன்றைய இளைஞர்களின் மனநிலையை மட்டுமல்லாமல் பெற்றோரின் எண்ண ஓட்டங்களையும் படம் பிடித்து காட்டுவதாக உருவாகியுள்ள இந்த படம் தற்போது இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வழக்கமாக இது போன்ற சில நல்ல படங்களை பெருமளவு மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ், நட்பு ரீதியாக, அந்தப்படம் ஓடும் திரையரங்குகளிலும் பொது வெளியிலும் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களையும் கருத்துக்களையும் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ‘பன் பட்டர் ஜாம்’ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் போக்குவரத்தில் பயணித்த பொதுமக்களுக்கும் பன் பட்டர் ஜாம் ஒன்றை பரிசாக வழங்கி படத்தின் சிறப்பு பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் அங்கிருந்த செய்தியாளர்களிடம் படம் பற்றி கூல் சுரேஷ் கூறும்போது, “பன் பட்டர் ஜான் திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த ஒரு அடிதடி, வன்முறை, ஆபாசம் இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு, பெற்றோருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த படம் இருக்கிறது. கமல், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கும்போது கண்களில் எப்படி ஒரு பொறி தெரிந்ததோ, அதேபோல ராஜூவின் கண்களிலும் அப்படி ஒரு நடிப்பு பொறி தெரிகிறது. இயக்குநர் ராகவ் மிர்தாத் அற்புதமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சார்லி, சரண்யா, தேவதர்ஷினி போன்ற மூத்த கலைஞர்கள் இந்த படத்தில் தங்களது அனுபவ நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்கள். இரண்டாவது வார்த்தையும் தாண்டி பல வாரங்கள் இந்த படம் ஓடும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here