தமிழக மக்கள் தங்கள் வீட்டு சொந்தமாக கொண்டாடும் அளவிற்கு, சமூகப்பணிகளால் எல்லோரது நேசத்தையும் பெற்றவர் மாஸ்டர் ராகவா. ஒரு திரைத்துறை பிரபலமாக அல்லாமல், அவர் செய்து வரும், ஒவ்வொரு உதவிகளாலும், சமூகப் பணிகளாலும் மக்கள் மனதில் ஆழப்பதிந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ், தற்போது அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளார்.

தானத்தில் சிறந்தது அன்னதானம், பசித்தவனுக்கு உணவு தருபவனே கடவுள், அதிலும் சுவையறியா ஏழை எளிய குழந்தைகளுக்கும், மக்களுக்கும், அறுசுவை உணவளிக்கும் வகையில், அவர் இந்த ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தை துவக்கியிருக்கிறார்.

இந்த அன்னதான விருந்து குறித்து மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கூறுகையில்..,
பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உயர்தர அறுசுவை உணவை, ஏழை குழந்தைகளும் சாப்பிட வேண்டும், பசியில் யாரும் வாடக்கூடாது, எனும் நோக்கத்தில் தான், என் அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தை துவங்கியிருக்கிறேன். 20 வருடம் முன் என் வீட்டில் 60 குழந்தைகளுக்கு உணவளித்தேன். இப்போது எங்கெல்லாம் பசியால் எளியோர் வாடுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களைத் தேடிச்சென்று எனது கைகளால் உணவளிக்கும் வகையில், இந்த விருந்து திட்டத்தை ஆரம்பித்துள்ளேன். இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. யாரும் பசியால் வாடக்கூடாது, அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்த திட்டத்தை மனநிறவுடன் தொடர்வேன், அனைவருக்கும் நன்றி என்றார்.

இந்த திட்டத்தில் முதல் கட்டமாக உணவருந்திய நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியில் பூரித்து, இதுவரை இப்படி ஒரு விருந்து உண்டதில்லை, மாஸ்டர் ராகவா லாரன்ஸின் இந்த திட்டம் தொடர வேண்டும் என மனதார வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here