தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன்.
சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் குமரன், தற்போது பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சிகள் செய்து வருகிறார். சின்னத்திரை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு கதைகளில் நடித்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
பள்ளிக் காலத்திலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த குமரன், பல ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்புத் தேடிப் போராடினார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களே கிடைத்த நிலையில், மனம் தளராமல் சின்னத்திரையில் நுழைந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அடையாளம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அந்தத் தொடரின் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கு, மீண்டும் சினிமா கதவுகளை அவருக்காகத் திறக்கச் செய்தது.
சின்னத்திரையில் கிடைத்த அந்த அடையாளமே குமரனுக்கு சினிமாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. ஆண்ட்ரூ இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸில் நடித்தது அவரது பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதன் மூலம் நடிகராக தனது வேறு பரிமாணத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதன்பிறகு ஹீரோவாக சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கிய குமரன், ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பிளாக் காமெடி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறும் குமரன், பல்வேறு வகை கதைகளில் நடித்து பார்க்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று தெரிவிக்கிறார். ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு அதே மாதிரியான கதைகளை மட்டும் தேர்வு செய்தால் அது நடிகரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து விடும் என்பதால், ஆரம்ப காலத்தில் பல்வேறு கதைகளில் முயற்சி செய்து பார்க்க விரும்புவதாக அவர் கூறுகிறார். சமீபத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் முயற்சி செய்யத் தயார் என்று அவர் தெரிவிக்கிறார். தற்போது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், காமெடி, ரியாலிட்டி அடிப்படையிலான கதைகள் உள்ளிட்ட பல்வேறு வகை படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்காலத்தில் நல்ல லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க வேண்டும் என்பது குமரனின் பெரிய ஆசைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் லவ், குடும்ப உணர்வு, காமெடி, டான்ஸ் ஆகிய அனைத்தும் கலந்து இருக்கும் ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறுகிறார். தனது திறமைகளை பல்வேறு கதைகளின் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் அவர் தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறார்.
சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில் தொடரும் குமரன், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் பார்வையாளர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் முன்னேறி வருகிறார். புதிய கதைகள், புதிய முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேலும் விரிவாக்க தயாராக இருக்கும் இளம் நடிகராக குமரன் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார்.




