நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே நீட்டுக்கு எதிராக முதன் முதலாக அதனை எதிர்த்து போராடியவர்கள் நாங்கள். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ மாணவர்கள் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி அனிதாவின் பெயரால் சென்னை காமராஜர் அரங்கில் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஐயா இராஜன் அவர்கள் தலைமையில் இந்தியா முழுமையிருந்தும் வந்திருந்த கல்வியாளர்கள், மருத்துவ ஆளுமைகள், அரசியல் தலைமைகள், திரைத்துறை ஆளுமைகள் என அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய, பிரமாண்டமான கண்டன மாநாட்டை நடத்தினோம். டெல்லியில் நேற்று நடந்த அடிதடி கலவரம் என்பது மனிதகுலம் சகித்துக் கொள்ள முடியாதது. ஆகப் பெரும் கண்டனத்திற்குரியது. நீட் என்கிற எமனுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் எதிர்த்து நின்று உறுதிமிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நீட்டை எதிர்க்காமல் ஆண்ட, ஆளுகின்ற கட்சிகள் எவர் மென்மையான போக்கை கையாண்டாலும் அவர்கள் தமிழ்நாட்டில் நீட் எமனால் உயிர் பலியான இருபதுக்கும் மேற்பட்ட எங்கள் வீட்டு பிள்ளைகளின் பெரும் சாவுக்கு துணை போகின்றவர்களாகவே கருதப்படுவார்கள்.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நீட்டுக்கு எதிரான ஒருமித்த கருத்தினை உருவாக்கி இந்திய ஒன்றிய பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து நிரந்தர நீட் விலக்கினை பெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
23.07.2026








