‘கீழ்ப்படிதலைக் கட்டமைக்க அதிகாரம் பெற்றெடுத்த முதல் குழந்தை மதம், இரண்டாவது குழந்தை பிரிவினை’ என சம்பிரதாய கதாநாயகத் துதிகளை எல்லாம் விடுத்து, எடுத்த எடுப்பிலேயே இறங்கியடித்தார் பெருமாள் வாத்தியார். ‘அதிகாரம் பெற்றெடுத்த இரு குழந்தைகளை எதிர்கொள்ளத் தேவை அரசியலறிவும் அமைப்பாய்த் திரள்தலும்’ என்று எதிர்ச்சமர் புரிந்த அம்பேத்கரியத்தை, ‘உழைப்புச் சக்திக்கான உண்மையான ஊதியம் லாபத்தின் பங்கே’ என்கிற மார்க்சிய மூலதனத்தை, ‘ஆம்பளைக்கு என் உடம்பு மேல என்ன அதிகாரம் இருக்கு’ என காலத்தின் தேவையான பெண்ணியத்தை… மானுடச் சமூகத்தின் ஆகப்பெரும் இந்தத் தத்துவங்களை எல்லாம் வசனங்கள் வழி போதித்து மொத்த இந்தியாவிற்கும் பாடமெடுத்தார்கள் இந்த மூன்று வாத்தியார்களும். உக்கிரமான கோடைக்கு நடுவே தூறும் சாரலைப் போல, ‘நீங்க எனக்குக் கொடுக்கிற எதுவும் வீண்போகாது’ எனத் தத்துவங்களுக்கு இடையே பெருங்காதலைத் தூவவும் இவர்கள் தவறவில்லை. வசனங்கள் வழியே மக்களை அரசியல்படுத்தும் தொன்றுதொட்ட தமிழ் சினிமா மரபை முன்னெடுத்துப் போகும் இந்தத் தோழர்கள், அடுத்த தலைமுறையின் கருத்து அரிவாள்கள்.








