தமிழ்த் திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குநர் இமயம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர், திரு. பாரதிராஜா, அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேனியில் தமிழக அரசின் சார்பில் ஒரு மணிமண்டபம் அமைய வேண்டும் என்பது தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரின் கோரிக்கையாக இருந்தது.

இந்த கோரிக்கையை கனிவுடன் ஏற்று, திரு. பாரதிராஜா அவர்களின் நினைவாக தேனியில், தமிழக அரசின் சார்பில் ரூபாய் 2.5 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தாங்கள் இன்று சட்ட சபையில் அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

தமிழ்த் திரைப்படக் கலைக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் கலைஞரின் நினைவைப் போற்றும் இந்த அறிவிப்பு, அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சார்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தச் சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட தங்களுக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்காக உருவாகும் இந்த மணிமண்டபம், திரு. பாரதிராஜா அவர்களின் நினைவையும், தமிழ் சினிமாவிற்கு அவரின் பங்களிப்பையும், எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு வரலாற்றுச் சின்னமாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞர்கள் மறைந்தால், தமிழக அரசின் இறுதி மரியாதை தரப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டு வரும் சிறப்பான செயல்பாடுகளோடு இந்த அறிவிப்பும் தமிழ் சினிமாவை சேர்ந்த அனைவருக்கும் மிகுந்த பெருமையை தந்துள்ளது.

நன்றியுடன்,

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here